கனவுகள் உடைந்து அதன் சில்லுகள் கால்களை உறுத்திய தருணத்தில். வாழ்க்கை கேவலத்தையும் அவமானத்தையும் பருகவைத்த தருணத்தில் . உன்னோடு பேச ஆயிரம் சேதிகள் இருக்கின்றன . உன்னிடம் சொல்ல ஆயிரம் கவிதைகள் இருக்கின்றன. எங்கு இருக்கிறாய் நீ ?
தெருவில் விளையாட செல்லும்போது உச்சிப்படை முனி வரும் வெளியே போகாதே என்பாய். சாயங்காலம் வெளியே சென்றால் கூதக்காது அடிக்குது வெளியே போகாதே என்பாய். கடல்கரைக்குப் போகாதே பிள்ளை பிடிக்கிறவன் பிடிச்சுகுவான் என்பாய் . கணக்கு போடலைனா நீ என் பிள்ளையே இல்லை என்பாய் . பால்கார ஆத்தாவிடம் உன்னை தவிட்டுக்கு தான் வாங்கினோம் என்பாய். அவமானம் தாங்காமல் சுருண்டு வீழ்ந்தேன் . சிறுவயதில் நீ முறித்துப்போட்ட தன்னம்பிக்கை என்னும் முதுகெலும்பை இப்போது சரிசெய்ய சொல்லுகிறாயே.